Powered By Blogger

Sunday, May 8, 2011

உயிர்பசி சமைக்கும் உலைக்கலன்






சுவாசங்களற்ற சுற்றுப்பாதையில்
சுற்றித் திரிவதுபோல் சுழல்கிறேன்
நீயில்லாத தனிமைத் திடலில்

வெறுமையின் வெப்பக்கனலில்
வெந்து தணிகிறது
முத்தமிடும் முன் நீ நிகழ்த்திய
முந்தைய வெட்கப் பொழுதுகள்

ஏக்கத்தின் தாக்கத்தில்
ஏங்கிக் கிடக்கிறது என் ஏகாந்தம்
உன் உடலெனும் நீர்த்தேக்கத்தில்
மீன்குஞ்சுகளாய் மாற..!

மின்காந்த அலைகளாய்
மிதந்துவரும் நின் நினைவலைகளில்
அலையெழுப்புகிறது என் கடல்!

பனிக்காற்றின் புகைமூட்டத்தில்
பார்க்க முடியாமல்போன பிரதேசமாய்
என் பருவ பால்வெளி மண்டலம்
உன் அருகாமை நினைவுகளோடும்
உருகி வழியும் கனவுகளோடும்!

அக்கினி வெய்யிலின் உக்கிர கொதிப்பில்
வெந்நீராய் மாறிய தண்ணீராய்
வேகிறது என் காதல்
காமத்தை உதற முடியாத
காட்டுத்தீயின் தகிப்போடு!

மீண்டும் மீண்டும் நீண்டித் தூண்டும்
நின் நினைவுகள் யாவும்
உயிர்பசி சமைக்கும்
உலைக்கலன்களென
உணர்கிறேன் இப்போது!